#ENGvsIND நங்கூரம் போட்டு சதமடித்த ஜோ ரூட்..! ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய பும்ரா
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதமடித்தார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் அடித்தது.
95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை 18 ரன்களுக்கு வீழ்த்தினார் முகமது சிராஜ். அவர் அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே ஜாக் க்ராவ்லியை வெறும் 6 ரன்னுக்கு வெளியேற்றிய பும்ரா, தொடக்க வீரர் சிப்ளியை 28 ரன்னில் வீழ்த்தி, அவருக்கும் ரூட்டுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.
அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோ(30), டேனியல் லாரன்ஸ்(25), ஜோஸ் பட்லர்(17) ஆகியோர் ஒருமுனையில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து கொண்டேயிருந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடி சதமடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
மிகச்சிறப்பாக ஆடி களத்தில் செட்டில் ஆகி சதமும் அடித்து, இந்திய அணியை அச்சுறுத்திய ரூட்டை 109 ரன்களுக்கு வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார் பும்ரா. இங்கிலாந்து அணி 274 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், சாம் கரனும் ராபின்சனும் இணைந்து ஆடிவருகின்றனர்.