டி20 உலகக் கோப்பை வென்று டிராபியோடு நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித் சர்மாவை பூங்கொத்து கொடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வரவேற்றார்.
பார்படாஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியைத் தொடர்ந்து பெரில் புயல் சூறாவளியால் இந்திய அணி வீரர்கள் பார்படாஸிலேயே சிக்கினர்.
இதைத் தொடர்ந்து பிசிசிஐ மூலமாக தனி விமானம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை பார்படாஸிலிருந்து புறப்பட்ட இந்திய அணி வீரர்கள் இன்று காலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை இந்தியா கொண்டு வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டிராபியை கையில் ஏந்தி வந்த ரோகித் சர்மா டிராபியை ரசிகர்களுக்கு காண்பித்தவாறு விமான நிலையத்திலிருந்து வெளியேறி சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிசிசிஐ எக்ஸ் பக்கத்திலும் இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்த வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், இந்திய வீரர்கள் பும்ரா, ரோகித், கோலி, ஷிவம் துபே, யஷஸ்வி யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் பாக்ஸிலிருந்து டிராபியை எடுத்து அதற்கு முத்தமிட்டு பின்பு மீண்டும் பாக்ஸிற்குள் வந்துள்ளனர். இந்த வீடியோவிற்கு இட்ஸ் ஹோம் என்று கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பூங்கொத்து கொடுத்து டி20 உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் ரோகித் சர்மாவை வரவேற்றார். அதன் பின்னர் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ஜெய் ஷா மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விமான நிலையத்திலிருந்து இந்திய அணி வீரர்கள் தங்கும் விடுதிக்கு பேருந்தில் சென்றனர்.
ஹோட்டலுக்கு வந்த ரோகித் சர்மா நடன கலைஞர்களுடன் இணைந்து உற்சாகமாக டான்ஸ் வீடியோ மகிழ்ந்தார். அதற்கு முன்னதாக விமானத்தில் டிராபியை வைத்து ரோகித் சர்மா செய்யும் அலப்பறைகள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகின்றனர். இதையடுத்து அவருடன் காலை உணவு அருந்துகின்றனர். அதன் பின்னர், மாலை 5 மணி முதல் டிராபியுடன் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்கின்றனர். மரைன் டிரைவில் தொடங்கும் இந்த ஊர்வலம் வான்கடே ஸ்டேடியத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
