மார்ச் 22ல் ஐபிஎல்; முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை?
ஐபிஎல் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதன் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐயின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் புதிய புதிய வீரர்களை தங்களது அணியில் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடந்தாலும், அரசுடன் தீவிர ஆலோசனை நடத்திய பிறகு 2 வாரங்களுக்கான அட்டவணையை மட்டுமே முதலில் வெளியிடுவோம். வரும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், இந்த ஆண்டுக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.