ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. கடந்த சீசனில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது. அதனால் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை மெகா ஏலத்தில் எடுத்துவிட்டன. எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது.
ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. அந்த பணியில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே ஐபிஎல் ஏலம் எங்கு நடைபெறும் என்பது பெரும் விவாதமாக இருந்துவந்தது.
இந்நிலையில், ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் அணிகளுக்கு ரூ.5 கோடி கூடுதலாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஒவ்வொரு அணிக்கும் ரூ.90 கோடி நிர்ணயிக்கப்பட்டது.
இப்போது கூடுதலாக ரூ.5 கோடி வழங்கப்பட்டு மொத்தம் ரூ.95 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலத்திற்கு பின் அணிகள் மீதம் வைத்திருக்கும் தொகையுடன் இந்த ரூ.5 கோடியையும் சேர்த்து ஏலத்தில் பங்கெடுக்கலாம்.
கடந்த சீசனுக்கான ஏலத்திற்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அதிகபட்சமாக ரூ.3.45 கோடியை கையில் வைத்துள்ளது. சிஎஸ்கே அணியிடம் ரூ.2.95 கோடி கையிருப்பில் உள்ளது. ஆர்சிபியிடம் ரூ.1.55 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸிடம் ரூ.95 லட்சமும், கேகேஆரிடம் ரூ.45 லட்சமும் கையிருப்பில் உள்ளன.
பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் மாதிரியான வீரர்கள் மற்றும் டி20 உலக கோப்பையில் சிறப்பாக ஆடிய சிறிய அணிகளின் சில வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் கிராக்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.