ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் செலவு செய்ய ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை கையிருப்பில் உள்ளது, எத்தனை வீரர்களை அணிகள் எடுக்க முடியும் என்பன குறித்த முழு விவரங்களை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைவதால் இந்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்கவுள்ளது.

இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஒவ்வொரு அணியும் தலா ரூ.90 கோடி செலவு செய்யலாம். ஆனால் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக 8 பழைய அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்பதால், அந்த அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கு ஒதுக்கிய தொகை போக, மீதத்தொகை அணிகளின் கையிருப்பில் இருக்கும். அதேபோல 2 புதிய அணிகளும், அவை ஏலத்திற்கு முன் எடுத்த 3 வீரர்களுக்கு அந்த ரூ.90 கோடியில் ஒதுக்கிய தொகை போக மீதத்தொகை அந்த அணிகளின் கையிருப்பில் இருக்கும்.

இந்த மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர் உட்பட சில பெரிய பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் ஏலம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். அந்தவகையில், அனைத்து அணிகளின் கையிருப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது, இன்னும் எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணியும் எடுக்க முடியும் ஆகிய விவரங்களை பார்ப்போம். வீரர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கும் எண்ணிக்கை, இன்னும் எத்தனை வீரர்களை எடுக்கலாம் என்பதுதான்.

அணிகள் கையிருப்பு வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.48 கோடி - 21 வீரர்கள்
டெல்லி கேபிடள்ஸ் - ரூ.47.5கோடி - 21 வீரர்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.48 கோடி - 21 வீரர்கள்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ரூ.59 கோடி - 22 வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் - ரூ.48 கோடி - 21 வீரர்கள்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ.72 கோடி - 21 வீரர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.62 கோடி - 22 வீரர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ரூ.57 கோடி - 22 வீரர்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.68 கோடி - 22 வீரர்கள்
குஜராத் டைட்டன்ஸ் - ரூ.52 கோடி - 22 வீரர்கள்