இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்.. கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கட்டாய மாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கட்டாய மாற்றம் செய்யப்படவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சரியாக செயல்படாததால், 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியது முதல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கோலோச்சிவரும் இந்திய அணி, நியூசிலாந்திடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
கடந்த போட்டியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் பிரித்வி ஷா, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் 16 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்களும் மட்டுமே அடித்தார். அதனால் அவரை நீக்கிவிட்டு அடுத்த போட்டியில் ஷுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால், பிரித்வி ஷா மீது நம்பிக்கை வைத்து பேசியிருந்தார் கேப்டன் கோலி.
இந்நிலையில், பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பயிற்சியில் கூட கலந்துகொள்ளவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி தொடங்குவதால், அவர் அந்த போட்டியில் ஆடுவது சந்தேகம் என தெரிகிறது. எனவே அடுத்த போட்டியில் ஷுப்மன் கில் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது.
Also Read - நியூசிலாந்தில் எப்படி பந்துவீசணும்..? இந்திய பவுலர்களுக்கு முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரின் அறிவுரை
ஷுப்மன் கில் டெஸ்ட் அணியில் கடந்த சில தொடர்களில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அவர் அறிமுகமாவதற்கான வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.