இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவிலிருந்து இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது.முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. 3வது டெஸ்ட் தர்மசாலாவில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் சீரமைப்புப்பணிகள் நடந்துவருகின்றன. மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதால் 3வது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவில் நடத்த முடியாது. அதனால் 3வது டெஸ்ட் போட்டி இடமாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவிலிருந்து இந்தூருக்கு மாற்றுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தூர், புனே, விசாகப்பட்டினம், ராஜ்கோட் ஆகிய 4 நகரங்களில் ஒன்றுக்கு மாற்றப்படும் என்று முன்கூட்டியே தகவல் வெளியாகியிருந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு
மார்ச் 1ம் தேதி தொடங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது.
