வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட்டின் பொறுப்பான அரைசதம் மற்றும் தீபக் சாஹர் - வாஷிங்டன் சுந்தரின் கடைசிநேர அதிரடியால் இந்திய அணி 50 ஓவரில் 265 ரன்கள் அடித்து, 266 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஎல் ராகுல், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு முறையே, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி மளமளவென 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, 13 ரன்களில் இன்னிங்ஸின் 4வது ஓவரில் அல்ஸாரி ஜோசஃபின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் கோலி டக் அவுட்டானார். தவானும் இன்னிங்ஸின் 10வது ஓவரில் 10 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 42 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினார். ஷ்ரேயாஸ் நிலைத்து நின்று நிதானமாக விளையாட, ரிஷப் பண்ட் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடி ஸ்கோரை உயர்த்தினார். கொரோனா பாதிப்பால் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயர், இந்த கம்பேக் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் அரைசதம் அடித்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 110 ரன்களை குவித்தது. அரைசதம் அடித்த பண்ட் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். களத்தில் செட் ஆகியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் ஹைடன் வால்ஷின் பந்தில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்து சத வாய்ப்பை தவறவிட்டார்.
இந்திய அணியின் ஸ்கோர் 37 ஓவரில் 187 ரன்களாக இருந்தபோது, 38வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த தீபக் சாஹர், ஆரம்பத்தில் நிதானம் காத்து, பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 38 பந்தில் 38 ரன்கள் அடித்து தீபக் சாஹர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெத் ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் ஒருசில பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர் அடித்து முடிக்க, 50 ஓவரில் 265 ரன்கள் அடித்த இந்திய அணி, 266 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்கள் அடித்தார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான் ஆகிய 3 பெரிய வீரர்கள் முதல் ஓவர்களுக்காகவே ஆட்டமிழந்தபோதிலும், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹரின் அபாரமான பேட்டிங்கால் 265 ரன்கள் அடித்தது இந்திய அணி.
