இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் 2வது இன்னிங்ஸில் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட்டின் அரைசதங்களால் 245 ரன்களை குவித்த இந்திய அணி, மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற்று 378 ரன்கள் என்ற கடினமான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் (4), ஹனுமா விஹாரி (11), விராட் கோலி(20), ஷ்ரேயாஸ் ஐயர்(19) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால் புஜாரா பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 66 ரன்களுக்கு புஜாரா ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரிஷப் பண்ட் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஷப் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 23 ரன்களும், ஷமி 13 ரன்களும் அடிக்க, 245 ரன்களுக்கு இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.

மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 378 ரன்கள் என்ற கடினமான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 2வது செசனில் இங்கிலாந்து இலக்கை விரட்ட தொடங்கியுள்ளது. நாளை முழு நாளும் எஞ்சியிருப்பதால் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பிருக்கிறது. கடைசி இன்னிங்ஸில் 378 ரன்கள் என்பது கடினமான இலக்கு என்பதால் இந்திய அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளது.