எடுத்த எடுப்புலயே ரோஹித், கோலி, ராகுல் அவுட்.. இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கம்
240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஹென்ரி வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு ரன்னுக்கு வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரில் ட்ரெண்ட் போல்ட்டின் பந்தில் விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார்.
உலக கோப்பை அரையிறுதியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டு தொடர்ந்து பெய்ததால் நேற்று ஆட்டம் தடைபட்டது. அதனால் எஞ்சிய போட்டி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய ஆட்டம் தொடங்கியதும் புவனேஷ்வர் குமார் பவுலிங்கை தொடர்ந்தார். எஞ்சிய 23 பந்துகளில் 27 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி 239 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஹென்ரி வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு ரன்னுக்கு வெளியேறினார். அதற்கு அடுத்த ஓவரில் ட்ரெண்ட் போல்ட்டின் பந்தில் விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி தான் ஆடியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் ரிவியூ எடுத்தார். பந்து உயரமாக சென்றது; ஆனால் பந்தின் கீழ் பகுதி கொஞ்சமாக ஸ்டம்பில் பட்டது. அது அம்பயர் கால் என்பதால் கோலியும் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
அதற்கு அடுத்த ஹென்ரியின் அடுத்த ஓவரில் ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணியின் நிலை பரிதாபமானது. 5 ரன்களுக்கே இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி டாப் ஆர்டரையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், டாப் ஆர்டர் மூவருமே தலா ஒரு ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறியுள்ளனர். எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கட்டாயமாக நன்றாக ஆடியாக வேண்டும். இல்லையெனில் இந்திய அணி தொடரை விட்டு வெளியேற வேண்டியதுதான்.
தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.