தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்தது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்தியா.

முதலிரண்டு டி20 போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரிஷப் பண்ட், வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய இந்த போட்டியிலும் டாஸ் தோற்றார். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல்படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், ட்வைன் பிரிட்டோரியஸ், ராசி வாண்டர் டசன், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வைன் பார்னெல், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல்2 போட்டிகளில் சரியாக ஆடாத ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 57 ரன்கள் அடித்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷனும் ஷ்ரேயாஸ் ஐயரும் களத்தில் நின்றபோது 12 ஓவரில் 120 ரன்களை குவித்தது இந்திய அணி. 13வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், அதே ஓவரில் ஷம்ஸியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, அரைசதம் அடித்த இஷான் கிஷனும் 54 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் ரன்வேகம் குறைந்தது.

தட்டுத்தடுமாறிய கேப்டன் ரிஷப் பண்ட் 8 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிய தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 4 பவுண்டரிகளை விளாசி 31 ரன்கள் அடித்து ஓரளவிற்கு நன்றாக முடித்து கொடுத்தார்.

இஷான் கிஷன் ஆட்டமிழக்கும்போது 13.4 ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 131 ரன்கள் ஆகும். எனவே பெரிய ஸ்கோரை அடித்திருக்கலாம். ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் சோபிக்காததால், 20 ஓவரில் இந்திய அணியால் 179 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 

180 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். யுஸ்வேந்திர சாஹல் அபாரமாக பந்துவீசி ப்ரிட்டோரியஸ், வாண்டர் டசன் மற்றும் கிளாசன் ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார். ரீஸா ஹென்ரிக்ஸ், மில்லர், ரபாடா, ஷாம்ஸி ஆகிய 4 விக்கெட்டுகளை ஹர்ஷல் படேல் வீழ்த்த, 131 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது. 

48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்தது.