தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக கோலி ஆடாததால் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க வீரர் மயன்க் அகர்வால் நன்றாக தொடங்கினார். ஆனால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சீனியர் வீரர்களான புஜாரா (3) மற்றும் ரஹானே (0) ஆகிய இருவருமே சொதப்பினர். அதன்பின்னர் 4வது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறி 20 ரன்களுக்கு விஹாரி ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் நிதானமாக ஆட, அஷ்வின் அதிரடியாக ஆடினார். டீ பிரேக்கிற்கு பின்னர் ரிஷப் பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷர்துல் தாகூர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். முகமது ஷமி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய அஷ்வின் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஜஸ்ப்ரித் பும்ரா 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
மிடில் ஆர்டரில் முக்கியமான மற்றும் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் படுமோசமாக ஆட்டமிழந்ததால் தான் இந்திய அணி வெறும் 202 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.
