India vs South Africa: சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.! 327 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (26ம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 60 ரன்கள் அடித்தார். புஜாரா ரன்னே அடிக்காமல் அவுட்டானார்.
கோலி 35 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடி சதமடித்தார் ராகுல். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான நல்ல அடித்தளம் அமைந்த நிலையில், செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள் ராகுல், ரஹானே களத்தில் இருந்ததால், 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2ம் நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ராகுலும் ரஹானேவும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ராகுல் 123 ரன்களுக்கு ரபாடாவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரஹானே (48) மற்றும் ரிஷப் பண்ட் (8) ஆகியோரை லுங்கி இங்கிடியும், ரவிச்சந்திரன் அஷ்வின் (4) மற்றும் ஷர்துல் தாகூர் (4) ஆகிய இருவரையும் ரபாடாவும் வீழ்த்தினர். ஷமியை 8 ரன்னில் இங்கிடி வீழ்த்த, கடைசி விக்கெட்டாக பும்ராவை 14 ரன்னில் மார்கோ ஜான்சென் வீழ்த்த, இந்திய அணி 327 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
4வது விக்கெட்டாக ராகுல் அவுட்டாகும்போது இந்திய அணியின் ஸ்கோர் 278 ரன்கள். அங்கிருந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. ராகுலின் விக்கெட்டுக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சீட்டுக்கட்டாய் சரிந்தது. இந்திய அணி 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.