எங்க டீமுக்கு ஆடுங்க.. ராயுடுவுக்கு செம ஆஃபர் அளிக்கும் வெளிநாட்டு அணி
ராயுடுவுக்கும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. உலக கோப்பைக்கு ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் கேப்டன் கோலி உறுதியும் அளித்தார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு ஓய்வு அறிவித்த நிலையில், அவருக்கு தங்கள் அணியில் ஆடுமாறு ஒரு நாடு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அம்பாதி ராயுடு, தொடர்ச்சியாக அணியில் இடம்பெற்றதில்லை. அவ்வப்போது எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ராயுடுவுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்தது.
உலக கோப்பையை மனதில்வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ரஹானே, ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே என பலரை பரிசோதித்து டயர்டான இந்திய அணிக்கு ராயுடுவின் மூலம் தீர்வு காணப்பட்டதாக கருதப்பட்டது.
ராயுடுவுக்கும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. உலக கோப்பைக்கு ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் கேப்டன் கோலி உறுதியும் அளித்தார்.
ஆனால் உலக கோப்பைக்கு முன்பாக நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் கடைசி நேரத்தில் ராயுடுவின் இடத்தை பிடித்தார். உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்தார். இதனால் ராயுடு கடும் அதிருப்தியடைந்தார்.
விஜய் சங்கர் காயத்தால் உலக கோப்பை தொடரின் பாதியில் விலகிய நிலையில், இப்போதாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த ராயுடுவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். இதனால் உச்சகட்ட விரக்தியில் அம்பாதி ராயுடு ஓய்வு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ராயுடு ஓய்வு அறிவிக்கும் முன்பாக ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், அவரை தங்கள் நாட்டு அணியில் ஆடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஐஸ்லாந்து அணியில் ஆட ஒப்புக்கொண்டால், தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க தயாராக உள்ளதாகவும் ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது.