சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பந்துவீசும் அணி, கடைசி ஓவரில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே நிறுத்தும் ஃபீல்டர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது ஐசிசி. 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அந்த குறிப்பிட்ட அணி வீரர்களுக்கு ஐசிசி விதியில் 2.22 பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த அபராதத்துடன் சேர்த்து புதிய கடுமையான தண்டனையையும் சேர்த்து விதியை மாற்றியமைத்துள்ளது ஐசிசி. குறிப்பிட்ட நேரத்துக்குள் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசியிருக்க வேண்டும். அப்படி வீசவில்லை என்றால், அதன்பின்னர் வீசப்படும் 5 பந்துகளுக்கும் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே நிற்கும் ஃபீல்டர்களில் ஒருவரை 30 யார்டு வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும்.

பொதுவாக கடைசி ஓவரில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களை நிறுத்தலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசவில்லை என்றால், கடைசி 5 பந்துகளுக்கும், 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இருக்கும் ஒரு ஃபீல்டரை வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும். எனவே வட்டத்துக்கு வெளியே 4 ஃபீல்டர்களை மட்டுமே நிறுத்த முடியும். இது பேட்டிங் அணிக்கு அடித்து ஆட வசதியாக இருக்கும்.

எனவே குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசவில்லை என்றால் அது பவுலிங் அணிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பேட்டிங் அணிக்கு பெரும் பலமாக அமையும்.