2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தான் உறவை கிரிக்கெட் மேம்படுத்தும்..! ஐசிசி தலைவர் நம்பிக்கை
2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து ஐசிசி தலைவர் க்ரெக் பார்க்லே கருத்து கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜாங்க ரீதியிலான நல்லுறவின்மை காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடுவதில்லை. கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரில் ஆடுவதை நிறுத்திவிட்டன.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே ஆடுகின்றன. அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கூட, இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 சுற்று போட்டியில் மோதின.
ஆனால் அதிலும் பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி ஆடுவதில்லை. மற்ற நாடுகளில் நடக்கும் ஐசிசி தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடியிருக்கின்றன. ஆனால் இரு நாடுகளும் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திய பிறகு, பாகிஸ்தானில் ஒரு ஐசிசி தொடர் கூட நடத்தப்படவில்லை. அதனால் இதுவரை அந்த பிரச்னை இல்லாமல் இருந்தது.
ஆனால் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. பாகிஸ்தானில் நடத்தப்படும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கலந்துகொள்ளுமா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பிசிசிஐ முடிவெடுக்காது. இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் இந்திய அணியும் பிசிசிஐயும் நடக்கும்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி தலைவர் க்ரெக் பார்க்லே, இது சவாலான டாஸ்க் தான். நம்மால் ஜியோபொலிடிகல் ஃபோர்ஸஸை கட்டுப்படுத்த முடியாது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த கிரிக்கெட் உதவி செய்யும் என நான் நம்புகிறேன். அதுதான் விளையாட்டின் பவர். இந்தியா - பாகிஸ்தான் உறவு மேம்பட கிரிக்கெட் உதவினால் மிகச்சிறப்பான சம்பவமாக இருக்கும் என்று பார்க்லே தெரிவித்தார்.