நீ நல்ல பேட்ஸ்மேன் தான்.. ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு நீ சரிப்பட்டு வரமாட்ட..! தூக்கி எறியப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்
டி20 உலக கோப்பைக்கான இந்திய மெயின் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஒவ்வொரு அணியாக அறிவிக்கப்பட்டுவருகிறது.
அந்தவகையில், இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப், தினேஷ் கார்த்திக் ஆகிய வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் ஆகிய மூவரும் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய் ஆகிய நால்வரும் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க - T20 World Cup: இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி! ஷமியின் அருமை தெரிந்தும் கழட்டிவிட இதுதான் காரணம்
ஆடும் லெவனை கருத்தில்கொண்டு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டிருப்பதால், ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லாத வீரர்களை, அவர்கள் திறமையான வீரர்களாக இருந்தாலும் கூட, வேறுவழியில்லாமல் இந்திய மெயின் அணியில் எடுக்காமல் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்க வேண்டியதாயிற்று.
அந்தவகையில் தான் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்திய மெயின் அணியில் எடுக்கப்படாமல் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்படாத அதேவேளையில், தீபக் ஹூடா அணியில் இடம்பெற்றுள்ளார். தீபக் ஹூடாவிற்கு பவுலிங் கொடுக்கப்போவதில்லை என்றால், அவரை ஆடும் லெவனில் எடுத்து பிரயோஜனமில்லை. ஆசிய கோப்பையில் அவருக்கு பவுலிங் கொடுக்காமலேயே வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடவைத்தது இந்திய அணி. அதையே தான் டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி நிர்வாகம் செய்யப்போகிறது என்றால், அவரை அணியில் எடுப்பதில் எந்த பலனும் இல்லை.
தீபக் ஹூடாவை விட ஷ்ரேயாஸ் ஐயர் அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான பேட்ஸ்மேன் தான் என்றாலும், அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது. ஷ்ரேயாஸ் ஐயர் டாப் 4 வரிசைக்குள் ஆடக்கூடிய பேட்ஸ்மேன். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் என்பது உறுதியாகிவிட்டது. சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே அந்த 4ம் வரிசைக்கு நடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரை விட ஒரு படி மேலே இருந்ததால் சூர்யகுமார் யாதவ் 4ம் வரிசை பேட்ஸ்மேனுக்கான இடத்தை இறுக பிடித்துவிட்டார்.
அதன்பின்னர் 5, 6ம் வரிசைகளில் ஹர்திக் பாண்டியா, ரிஷப்/தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆடுவார்கள் என்பதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை. அதனால் தான் அவரை மெயின் அணியில் எடுக்கவில்லை. மேலும் ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. மிகத்திறமையான பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் அவரது பலவீனத்தை அம்பலப்படுத்திவிட்டார். எல்லா பேட்ஸ்மேனுக்குமே பலவீனம் என்று ஏதாவது இருக்கத்தான் செய்யும். அதை முடிந்தவரை வெளியே காட்டாமல் சமாளித்து ஆடவேண்டும். ஒருவேளை பலவீனம் அம்பலப்பட்டுவிட்டால் அதை சரி செய்து கொண்டு மேலும் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டும்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
ஷ்ரேயாஸ் ஐயர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுவதை எதிரணிகள் கண்டுபிடித்துவிட்டதால், அதையே அவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகின்றன. அவரும் அந்த பலவீனத்தை ஜெயிக்க முயன்றுகொண்டிருக்கிறார் என்றாலும், நன்றாக பவுன்ஸ் ஆகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஷ்ரேயாஸ் ஐயர் சோபிப்பது கடினம் என்று இந்திய அணி நிர்வாகம் கருதியிருக்கக்கூடும். இந்த காரணங்களால் தான் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய மெயின் அணியில் எடுக்கப்படாமல் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.