பிசிசிஐயில் சிபாரிசு இல்லையென்றால் இந்திய அணியின் கேப்டனாக முடியாது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

1998லிருந்து 2016ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக 2016ம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், அதன்பின்னர் 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத நிலையில், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக 2015ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடினார். அதன்பின்னர் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ஹர்பஜன் சிங், அதுமுதல் தனது மனதிலிருக்கும் ஆதங்கங்களை எல்லாம் கொட்டிவருகிறார். தான் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தன்னிடம் தெரியப்படுத்தப்படவேயில்லை என்றும், இதுதொடர்பாக தோனியிடம் பலமுறை கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஹர்பஜன் சிங்கின் கருத்து, அவர் ஓரங்கட்டப்பட்டதில் தோனியின் பங்கும் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ஹர்பஜன் சிங் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன்சி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதும் பெரிய சாதனை தான். ஆனால் நான் கேப்டனாக நியமிக்கப்பட, எனக்கு பிசிசிஐயில் யாரும் நெருங்கியவர்கள் கிடையாது. இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களை யாரையாவது தெரிந்துவைத்திருக்க வேண்டும். சிபாரிசு இருந்தால்தான் இந்திய அணியின் கேப்டனாக முடியும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

ஹர்பஜன் சிங்கின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.