ராகுல் ஃபார்மில் இல்லாதது கூட ஒருவகையில் நல்லதாய் போயிற்று; ரோஹித்துடன் கோலியே தொடக்க வீரராக இறங்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-2 என வென்றது. முதல் 4 போட்டிகளிலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல், 2 போட்டிகளில் டக் அவுட்டானார். மற்ற 2 போட்டிகளில் சேர்த்தே 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து கடைசி டி20 போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு கூடுதல் பவுலராக நடராஜன் சேர்க்கப்பட்டார். அதனால் ரோஹித்துடன் கோலியே தொடக்க வீரராக இறங்கினார். அணியின் சீனியர் வீரர்களான ரோஹித்தும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கி அபாரமாக ஆடினர். இருவரும் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தி அருமையாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்களை குவித்தனர். ரோஹித் இந்த போட்டியில் 34 பந்தில் 64 ரன்களும், கோலி 52 பந்தில் 80 ரன்களும் குவித்தனர்.

ரோஹித் - கோலியின் ஓபனிங் பேட்டிங்கை கண்ட கவாஸ்கர், அவர்கள் இருவருமே தொடக்க வீரர்களாக தொடர்ந்து இறங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், டி20 போட்டியை பொறுத்தமட்டில் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் அதிகமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில், கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாதது நல்லதாய் போயிற்று. அதனால் தான் கோலி தொடக்க வீரராக இறங்கினார். சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் தான் ஆடினார். அவர் தொடக்க வீரராக இறங்க ஆரம்பித்த பின்னர், அவரது கிரிக்கெட் கெரியரே தலைகீழாக மாறியது. இந்திய அணிக்கும் நல்லதாய் அமைந்தது.

எனவே அதேபோலவே கோலியும் தொடக்க வீரராக இறங்கலாம். ரோஹித் - கோலி தொடக்க ஜோடியையே இந்திய அணி தொடரலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.