Asianet News TamilAsianet News Tamil

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கண்டிப்பா அவரைத்தான் நியமிக்கணும்..! கம்பீர் கறார்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டுக்கான இந்திய அணியையும் ரோஹித் சர்மா தான் வழிநடத்த வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

gautam gambhir opines rohit sharma should lead team india across formats
Author
Chennai, First Published Jan 19, 2022, 7:06 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவைத்தான் பிசிசிஐ கேப்டனாக நியமிக்கும். ஏனெனில் அவர் தான் கேப்டன்சியில் நல்ல அனுபவம் கொண்டவர். உடனடியாக கேப்டன்சியை ஏற்க தகுதியான வீரர்.

ஆனால் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகாலம் கேப்டனாக இருக்கக்கூடிய வீரரைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சில முன்னாள் வீரர்கள், ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் சரியாக வராது. ரோஹித்தைத்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார் கௌதம் கம்பீர்.

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா தான் 3 விதமான ஃபார்மட்டிலும் இந்திய அணியை வழிநடத்த வேண்டும். ராகுல் துணை கேப்டனாக செயல்பட வேண்டும். 3 விதமான அணியையும் ஒரு கேப்டன் வழிநடத்தினால் தான் அணியின் நிலைத்தன்மை, அணுகும் முறை ஆகியவற்றிற்கு சரியாக இருக்கும். டி20 உலக கோப்பையும் நெருங்குகிறது. எனவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தான் செயல்பட வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios