#INDvsENG 2வது டெஸ்ட்டில் அவரை சேர்க்காதீங்க; பிரச்னை ஆகிடும்.! ஸ்டார் பிளேயருக்கு ஓய்வை வலியுறுத்தும் கம்பீர்
இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வளிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பவுலிங், ஃபீல்டிங் இரண்டுமே சுமாராகவே இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் பவுலிங், ஃபீல்டிங், ஃபீல்டிங் செட்டப், திட்டமிடல் ஆகிய அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.
3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் அடித்துள்ளது. 4ம் நாள் ஆட்டத்தை வாஷிங்டன் சுந்தரும் அஷ்வினும் தொடரவுள்ளனர்.
இந்த போட்டியில் இந்திய அணி தேர்வே கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. குல்தீப் யாதவை சேர்க்காமல் 2 ஆஃப் ஸ்பின்னர்களை சேர்த்ததே தவறு என்று விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், சென்னையில் நடக்கும் 2வது டெஸ்ட்டில் பும்ராவை சேர்க்கக்கூடாது என்று கம்பீர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவில் பேசிய கவுதம் கம்பீர், பும்ராவை 2வது டெஸ்ட்டில் ஆடவைக்கக்கூடாது. இந்த டெஸ்ட்டின் எக்ஸ் ஃபேக்டர் பும்ரா. அவரை பிங்க் பந்து(பகலிரவு) டெஸ்ட் போட்டிக்கு பாதுகாத்துவைக்க வேண்டும். அவரை அதிகமான ஓவர்கள் கொண்ட நீண்ட ஸ்பெல்லை வீசவைக்கக்கூடாது. இந்த தொடரில் பும்ரா மிக முக்கியமான வீரர்; எனவே அவரை அதிக ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசவைக்கக்கூடாது. ஒருவேளை அப்படி செய்தால், அது இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரும் பிரச்னையாக அமைந்துவிடும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.