கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நிதியுதவி கோரியிருந்த நிலையில், கவுதம் கம்பீர் நிதியுதவிகளை வாரி வழங்கியுள்ளார். 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 900ஐ கடந்துவிட்ட நிலையில், 25 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா, சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, நாட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்யுங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

Scroll to load tweet…

பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடியை நிதியுதவியாக வழங்கினார். சுரேஷ் ரெய்னா, பிரதமர் நிதிக்கு ரூ.31 லட்சத்தையும் உத்தர பிரதேச மாநில முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.21 லட்சத்தையும் வழங்கினார்.

கங்குலி, சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து ஆகியோர் பிரதமர் மோடி நிதியுதவி கோருவதற்கு முன்பாகவே, தங்களால் முடிந்ததை உதவிகளை அறிவித்துவிட்டனர். 

இந்நிலையில், பிரதமர் நிதியுதவி கோருவதற்கு முன்பாகவே முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி எம்பி-யுமான கம்பீர், டெல்லி முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியிருந்த கம்பீர், பிரதமர் கேர்ஸ் நிதிக்கு தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியையும் தனது ஒரு மாத எம்பி ஊதியத்தையும் வழங்கியுள்ளார்.

மேலும் தனது தொகுதி மக்களுக்கு 2000 உணவு பொட்டலங்களையும் வழங்கியுள்ளார் கம்பீர்.