IPL 2022: 2011 உலக கோப்பை வின்னிங் இந்திய அணியில் அங்கம் வகித்தவர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கும் அகமதாபாத்
அகமதாபாத் அணியின் பயிற்சியாளர்களாக யார் யார் நியமிக்கப்படவுள்ளார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன.
எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு (அதிகபட்சம் 4 வீரர்கள்) மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது.
இந்நிலையில், 2 புதிய அணிகளில் ஒன்றான லக்னோ அணி பயிற்சியாளர் குழுவை நியமிப்பதில் அதிவேகமாக செயல்பட்டுவருகிறது. ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஆண்டி ஃப்ளவரை தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கௌதம் கம்பீரை ஆலோசகராவும், கேகேஆர் அணி கோப்பையை வென்றபோது உதவி பயிற்சியாளராக இருந்த விஜய் தாஹியாவை உதவி பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது லக்னோ அணி.
லக்னோ அணி அதிவேகமாக செயல்பட்டுவரும் நிலையில், அகமதாபாத் அணியோ மந்தமாக செயல்படுகிறது. இதுவரை எந்த பயிற்சியாளரையும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கவில்லை. எந்த 3 வீரர்களை எடுக்கிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் இவை குறித்த ஊகங்கள் மட்டும் வந்துகொண்டே இருக்கின்றன.
அந்தவகையில், அகமதாபாத் அணி யாரை பயிற்சியாளராக நியமிக்கப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அகமதாபாத் அணி, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனும், 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டனை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு இந்தியாவின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ராவை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரி கிறிஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகிய இருவருமே 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் அங்கம் வகித்தவர்கள். கிறிஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகிய இருவரும் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.