#SLvsIND கிரேட் கிரிக்கெட்டரான ரணதுங்கா அப்படி பேசியிருக்கக்கூடாது..! முன்னாள் இந்திய வீரர் தாக்கு
சிறந்த கிரிக்கெட் வீரரான அர்ஜூனா ரணதுங்கா, இலங்கைக்கு இந்தியா அனுப்பிய இந்திய அணி இரண்டாம் தர அணி என்று விமர்சித்திருக்கக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கபதி ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், இது இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா விமர்சித்திருந்தார்.
ரணதுங்காவின் விமர்சனத்துக்கு, அப்படியெல்லாம் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியமே விளக்கமளித்திருந்தது. ஆகாஷ் சோப்ராவும் ரணதுங்காவிற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். இந்திய முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதியும் இதுகுறித்து கருத்து கூறியிருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தாவும் பதிலடி கொடுத்திருந்தார். இலங்கை சுற்றுப்பயணதுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் சூர்யகுமார் யாதவும் பதிலடி கொடுத்திருந்தார். இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வாவும் ரணதுங்காவின் கருத்து குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், ரணதுங்காவின் கருத்து குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கபதி ராஜூ, 2ம் தர அணி என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். சர்வதேச கிரிக்கெட்டில் ஆட வரும் அனைவருமே நல்ல கிரிக்கெட்டர்கள் தான். இரண்டாம் தர அணி என்று எந்த அணியையும் அழைக்கமுடியாது. ரணதுங்கா அந்த இடத்தில் தான் தவறு இழைத்துவிட்டார். இரண்டாம் தர அணி என்று ரணதுங்கா கூறியிருக்கக்கூடாது. சிறந்த கிரிக்கெட்டரான அவர் இப்படியொரு கருத்தை கூறியிருக்கக்கூடாது என்று வெங்கபதி ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.