#ENGvsSL மழையால் முடிவில்லாமல் முடிந்த கடைசி ஒருநாள் போட்டி..! தொடரை வென்றது இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆன இலங்கை அணி, ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்த நிலையில், 3வது போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. மிடில் ஆர்டர் வீரர் ஷனாகா மட்டுமே சிறப்பாக ஆடி 48 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்துகொண்டே இருந்ததால், 42வது ஓவரிலேயே 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
167 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்துக்கு இலங்கை நிர்ணயித்த நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டது. ஆடிய 5 போட்டிகளிலும் தோற்ற இலங்கை அணி, ஒரேயொரு ஆறுதல் வெற்றியையாவது பெறும் முனைப்பில் இருந்த நிலையில், இலங்கை அணியின் அந்த நினைப்பும் தகர்ந்தது.
இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. கடைசி போட்டி முழுவதுமாக ஆடியிருந்தாலும் இலங்கை தோற்றுத்தான் போயிருக்கும். ஏனெனில் 167 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து எளிதாக அடித்திருக்கும்.