#SLvsENG எம்பல்டேனியாவிடம் மண்டியிட்டு சரணடையும் இங்கிலாந்து வீரர்கள்.. மறுமுனையில் நங்கூரம் போட்ட ஜோ ரூட்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் எம்பல்டேனியாவின் பந்தில் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகின்றனர்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் 2வது டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். மேத்யூஸ் 110 ரன்கள் அடிக்க, டிக்வெல்லா(92), சண்டிமால்(52), தில்ருமான் பெரேரா(67) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் டோமினிக் சிப்ளி(0), ஜாக் க்ராவ்லி(5) ஆகிய இருவரையும் எம்பல்டேனியா வீழ்த்தினார். ஐந்து ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணியை கேப்டன் ரூட்டும் பேர்ஸ்டோவும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஜோ ரூட் 67 ரன்கள் அடித்திருந்தார். அவருடன் பேர்ஸ்டோ களத்தில் இருந்தார்.
3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரூட்டும் பேர்ஸ்டோவும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவும் 28 ரன்களில் எம்பல்டேனியாவின் பந்தில் ஆட்டமிழக்க, அவரது பந்திலேயே லாரன்ஸும் 3 ரன்னுக்கு வெளியேறினார். அரைசதம் அடித்த பட்லர் 55 ரன்களுக்கு ரமேஷ் மெண்டிஸின் பவுலிங்கில் அவுட்டானார். சாம் கரனை 13 ரன்களுக்கு வீழ்த்திய எம்பல்டேனியா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி இழந்த ஆறு விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட்டுகள், எம்பல்டேனியா வீழ்த்தியவை.
இலங்கையின் இடது கை ஸ்பின்னர் எம்பல்டேனியாவின் பவுலிங்கில் ஒருமுனையில் இங்கிலாந்து வீரர்கள் ஆட்டமிழக்க மறுமுனையில் ஜோ ரூட் களத்தில் நங்கூரம் போட்டு சதமடித்தார். 3ம் நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கின்போது, இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் அடித்துள்ளது. ரூட் 137 ரன்களுடன் களத்தில் உள்ளார்.