டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை.. ஆம் ஆத்மி அரசு அதிரடி
டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த டெல்லி அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இத்தாலியில் அதன் வீச்சு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளை காண இந்தியாவில் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் நடத்தப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல் நடத்துவது குறித்து நாளை(சனிக்கிழமை) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.
இதற்கிடையே மகாராஷ்டிரா மாநில அரசு, மும்பையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை தடை செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர், ஐபிஎல்லை இந்த முறை நடத்தக்கூடாது என்று பிசிசிஐக்கு மத்திய அரசை உத்தரவிடுமாறு, நீதிமன்றம் உத்தரவிடக்கோரி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஐபிஎல் நடத்துவது குறித்து நாளை ஐபிஎல் நிர்வாகக்குழு நடக்கவுள்ளது. பிரிஜேஸ் படேல் தலைமையிலான இந்த கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஐபிஎல் அணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் நடத்துவது குறித்து நாளை முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த, டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.