ஐபிஎல் 14வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 172 ரன்களை குவித்து, 173 ரன்கள் என்ற கடின இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் பிரித்வி ஷா நிலைத்து நின்று பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, 4ம் வரிசையில் இறங்கிய அக்ஸர் படேலும் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, 34 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 10.2 ஓவரில் 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. 4வது விக்கெட்டாக பிரித்வி ஷா ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்.! ரமீஸ் ராஜா கருத்து

அதன்பின்னர் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஹெட்மயர் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 5வது விக்கெட்டுக்கு ரிஷப்பும் ஹெட்மயரும் இணைந்து 83 ரன்களை சேர்த்தனர். அதிரடியாகவும் பொறுப்புடனும் ஆடிய ஹெட்மயர் 37 ரன் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசிவரை களத்தில் நின்று அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 35 பந்தில் 51 ரன்கள் அடிக்க, டெல்லி அணி 20 ஓவரில் 172 ரன்களை குவித்து 173 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.