IPL 2021 ராஜஸ்தான் ராயல்ஸ் செம பவுலிங்! டெல்லி அணியை குறைவான ரன்னுக்கு சுருட்டிய ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு
டெல்லி கேபிடள்ஸ் அணியை 154 ரன்களுக்கு சுருட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது.
ஐபிஎல் 14வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான்(8) மற்றும் பிரித்வி ஷா(10) ஆகிய இருவரையும் முறையே கார்த்திக் தியாகி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகிய இருவரும் வீழ்த்தினர். 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட டெல்லி அணிக்கு, 3வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து 62 ரன்களை சேர்த்து கொடுத்தனர்.
ரிஷப் பண்ட் 24 ரன்களில் முஸ்தாஃபிசுரின் பந்தில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயரை ராகுல் டெவாட்டியா வீழ்த்தினார். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ஷிம்ரான் ஹெட்மயர் 16 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் லலித் யாதவ்(14), அக்ஸர் படேல்(12), அஷ்வின்(6) ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது டெல்லி அணி.
அதிரடியான பேட்டிங் ஆர்டரை கொண்ட டெல்லி அணியை, ராஜஸ்தான் பவுலர்கள் அருமையாக பந்துவீசி பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி, 154 ரன்களுக்கு சுருட்டியதையடுத்து, ராஜஸ்தான் அணி 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது.