நிதிஷ் ராணா - அனுஜ் ராவத் அபாரம்.. வாழ்வா சாவா போட்டியில் உத்தரகண்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய டெல்லி
பிரிலிமினரி காலிறுதி போட்டியில் உத்தரகண்ட்டை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற டெல்லி அணி, காலிறுதிக்கு தகுதிபெற்றது.
விஜய் ஹசாரே தொடரில் 7 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், 8வது அணியை தீர்மானிக்கும் பிரிலிமினரி காலிறுதி போட்டி இன்று நடந்தது. டெல்லியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, உத்தரகண்ட்டை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
உத்தரகண்ட் அணியின் தொடக்க வீரர் கமல் சிங்(77), கேப்டன் குணால் சந்தேலா(62) ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்களும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது உத்தரகண்ட் அணி.
288 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி அணியின் நிதிஷ் ராணா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அபாரமாக ஆடிய அவர் 88 பந்தில் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் அனுஜ் ராவத்தும், கேப்டன் பிரதீப் சங்வானும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 7வது விக்கெட்டுக்கு 143 ரன்களை குவித்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.
சிறப்பாக ஆடிய அனுஜ் ராவத் 85 பந்தில் 95 ரன்களும், டெல்லி கேப்டன் பிரதீப் சங்வான் 58 ரன்களும் அடித்ததையடுத்து, 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, காலிறுதிக்கு தகுதிபெற்றது. காலிறுதியில் டெல்லி அணி உத்தர பிரதேசத்தை எதிர்கொள்கிறது.