எங்கே தப்பு நடந்துச்சுனே தெரியல..! தீபக் சாஹர் வருத்தம்
கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மிகக்கண்டிப்புடன் பின்பற்றியும் எப்படி இத்தனை பேருக்கு கொரோனா பரவியது என்று தெரியவில்லை என சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
கொரோனா பயோ பபுளில் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தும் கூட கொரோனா பரவியது. ஒருவேளை வீரர்கள் பயோ பபுளை விதிகளை மீறினரோ, அதனால் தான் கொரோனா பரவியதோ என்ற சந்தேகமும் எழுந்தது.
அதுகுறித்த கேள்வி பிசிசிஐ தலைவர் கங்குலியிடமும் எழுப்பப்பட்டது. ஆனால், வீரர்கள் பயோ பபுளை மீறினர் என்று தான் நினைக்கவில்லை என்றும் அப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆனால் எப்படி பரவியது என்று சொல்வது மிகக்கடினம் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.
கொரோனா பயோ பபுள் விதிகளை எந்த வீரரும் மீறவில்லை என்று கங்குலி தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரும் அதையே தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அந்த அணியை சேர்ந்த தீபக் சாஹர் பேசுகையில், கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் வர ஆரம்பித்ததையடுத்து, சிஎஸ்கே அணி நிர்வாகம் எங்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியது. அதை ஏற்று அனைவருமே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டோம். எந்த வீரருமே பயப்படவில்லை; அருமையாக கையாண்டனர். ஆனால் அனைத்து விதிமுறைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்ட போதிலும், கொரோனா பரவியது எப்படி என்றுதான் தெரியவில்லை. எங்கு தவறு நடந்தது என்றே தெரியவில்லை என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.