IPL 2022 அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளை கோடிகளை இறைத்து ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள்..! முழு விவரம் உள்ளே
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளை முறையே சிவிசி கேபிடள்ஸ் மற்றும் ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து அண்மையில் நடந்து முடிந்தது வரையிலான 14 சீசன்களில் 8 அணிகள் மட்டுமே ஐபிஎல்லில் ஆடிவந்தன. அடுத்த சீசனில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட அகமதாபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய 2 நகரங்களை மையமாக கொண்ட 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த அணிகளை கைப்பற்றுவதற்கு ஆர்பிஎஸ்ஜி, சிவிசி கேபிடள்ஸ், அதானி குழுமம் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவியது. பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோனேவும் இந்த அணிகளில் ஒன்றை ஏலத்தில் எடுக்க போட்டியிட்டனர்.
இறுதியில், அகமதாபாத் அணியை ரூ.5166 கோடிக்கு சிவிசி கேபிடள்ஸ் நிறுவனமும், லக்னோ அணியை ரூ.7090 கோடிக்கு ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமமும் ஏலத்தில் எடுத்தன. இந்த 2 அணிகளுடன் சேர்த்து அடுத்த ஐபிஎல் சீசனில் மொத்தமாக 10 அணிகள் ஆடவுள்ளதால் அடுத்த சீசன் களைகட்டும்.