சிஎஸ்கேவிற்கு செம நெருக்கடி.. முதல் 2 ஓவர்களில் 2 ஓபனர்களும் காலி
சிஎஸ்கே அணி முதல் 2 ஓவரிலேயே தொடக்க வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித்தும் டி காக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் 4 ஓவர்களிலேயே 48 ரன்களை சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் ஐந்தாவது ஓவரிலேயே 12 ரன்களில் அவுட்டாக, அடுத்த ஓவரிலேயே 33 ரன்களில் டி காக் ஆட்டமிழந்தார்.
அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது சிஎஸ்கே அணி. ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ் ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சவுரப் திவாரி மட்டுமே 31 பந்தில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸின் பவர் ஹிட்டர்கள் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகியோர் சொதப்பியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்து 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
163 என்ற ரெண்டுங்கெட்டான் இலக்கை விரட்ட சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சனும் முரளி விஜயும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட், முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷேன் வாட்சனை 4 ரன்களில் வீழ்த்த, அதற்கடுத்த ஓவரிலேயே முரளி விஜயை ஒரு ரன்னில் வீழ்த்தினார் ஜேம்ஸ் பாட்டின்சன்.
முதல் 2 ஓவர்களிலேயே தொடக்க வீரர்கள் இருவரையுமே சிஎஸ்கே அணி இழந்தது. இதையடுத்து ஃபாஃப் டுப்ளெசிஸும் அம்பாதி ராயுடுவும் இணைந்து ஆடிவருகின்றனர். முதல் 2 விக்கெட்டுகளை 2 ஓவரில் இழந்துவிட்டதால், கவனமுடன் ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஆடியதால், டுப்ளெசிஸ் மற்றும் ராயுடுவால் பெரிதாக அடித்து ஆடமுடியவில்லை. அதனால் பவர்பிளேயில்(ஆறு ஓவர்கள்) 2 விக்கெட் இழப்பிற்கு ரன்களை மட்டுமே 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.