ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் ஆர்சிபியும் மோதின. இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே அணி, இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா/ப்ரிட்டோரியஸ்/ஆடம் மில்னே.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, மொயின் அலியும் 3 ரன்னில் நடையை கட்ட, 6.4 ஓவரில் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி.
ஆனால் அதன்பின்னர் ராபின் உத்தப்பாவும் ஷிவம் துபேவும் இணைந்து அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 10 ஓவரில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் மட்டுமே அடித்தது. அதன்பின்னர் 11வது ஓவரிலிருந்து ஒவ்வொரு ஓவரிலும் ஒருசில சிக்ஸர்களை இருவரும் தொடர்ச்சியாக விளாச, அணியின் ஸ்கோர் அதிவேகமாக உயர்ந்தது. உத்தப்பா - துபே ஆகிய இருவருமே அரைசதம் கடந்து சதத்தை நோக்கி சென்றனர். அதிரடியாக ஆடிய உத்தப்பா 50 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 88 ரன்களை குவித்தார். 46 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஷிவம் துபே 95 ரன்களை குவித்தார். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்த சிஎஸ்கே அணி, உத்தப்பா மற்றும் துபேவின் காட்டடியால் கடைசி 10 ஓவரில் 156 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.
217 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் ஃபாஃப் டுப்ளெசிஸ் (8), விராட் கோலி(1), அனுஜ் ராவத் (12) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 11 பந்தில் 2பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்து வேகமாக ஆடினார். ஆர்சிபி அணியின் ஸ்கோரை வேகமாக மேக்ஸ்வெல் உயர்த்திய நிலையில், 26 ரன்னில் ஜடேஜாவின் பந்தில் போல்டாகி வெளியேறினார் மேக்ஸ்வெல். அதன்பின்னர், பிரபுதேசாய்(34), ஷபாஸ் அகமது(41), தினேஷ் கார்த்திக்(34) ஆகியோர் அடித்து ஆடினாலும் 20 ஓவரில் 193 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
