இந்திய 'ஏ' கிரிக்கெட் அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பப் பெயர் காரணமாகவே அவர் புறக்கணிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷமா முகமது குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான், இந்திய 'ஏ' அணியில் சேர்க்கப்படாதது குறித்து காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தித்தொடர்பாளர் ஷமா முகமது எழுப்பிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சர்பராஸ் கான் தனது குடும்பப் பெயர் காரணமாகவே புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கைவிடப்பட்ட சர்பராஸ் கான்

28 வயதான சர்பராஸ் கான், முதல்தரப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இளம் வயதில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது. இருப்பினும், தனது தொடர் முயற்சிக்குப் பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் விளையாடினார். பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் அவர் விளையாடிய 6 போட்டிகளில் 11 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 1 சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 37.10 ஆகும்.

அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் ரிஷப் பண்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டபோது, அதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குற்றச்சாட்டு

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தித்தொடர்பாளரான ஷமா முகமது, சமூக ஊடகங்களில், "சர்பராஸ் கான் அவருடைய குடும்பப் பெயரால் இந்திய 'ஏ' கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்குத் தெரியும்" என்று பதிவிட்டிருந்தார்.

பா.ஜ.க.வின் கடுமையான பதிலடி விளையாட்டில் அரசியலைக் கலப்பதாகக் கூறி, ஷமா முகமதுவின் இந்த கருத்துக்களுக்குப் பா.ஜ.க. தலைவர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.

பாஜகவின் பதிலடி

பா.ஜ.க. தலைவர் பூனவல்லா, ஷமா முகமதுவின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், "இந்தப் பெண்மணியும் அவருடைய கட்சியினரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை உடல் கேலி செய்த பிறகு, அவரும் அவருடைய கட்சியினரும் நமது கிரிக்கெட் அணியை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க விரும்புகிறார்களா? நாட்டைப் பிரித்த பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லையா? இதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமதுவும் விளையாடுவார்கள். இந்தியாவை வகுப்புவாத, சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்" என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இதே ஷமா முகமதுதான் இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை அவரது பருத்த உடலைக் குறிப்பிட்டு விமர்சித்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது பதிவை நீக்கியிருந்தார்.

விளையாட்டுத் துறையில் வெளிப்படையான முறையில் தேர்வு நடைபெறுவதாகவும், அதில் மத ரீதியான காரணங்கள் கற்பிக்கப்படுவது தவறு என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.