இந்திய கிரிக்கெட்டின் அபாரமான சக்தியாக திகழும் விராட் கோலியின் இடத்தை யார் பூர்த்தி செய்வார் என்று கிறிஸ் கெய்ல் கருத்து தெரிவித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக விராட் கோலி திகழ்கிறார். பேட்டிங் ஆர்டரில் முக்கியமான இடமான மூன்றாம் வரிசையில் இறங்கி, எப்படியான சூழலிலும் ஆட்டத்தை சிறப்பாக எடுத்து செல்பவர் கோலி. குறிப்பாக இலக்கை விரட்டுவதில் வல்லவர். தான் களத்தில் நிலைத்துவிட்டால் எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டிவிடுவார். 

இந்திய கிரிக்கெட்டின் அபாரமான சக்தியாக திகழும் விராட் கோலியின் இடத்தை கேஎல் ராகுல் தான் பூர்த்தி செய்வார் என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். கிறிஸ் கெய்லும் ராகுலும் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். 

கேஎல் ராகுல் கடந்த சீசனில் அபாரமாக ஆடிய நிலையில், இந்த சீசனிலும் சிறப்பாக ஆடிவருகிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில் வேறு எந்த வீரருமே சரியாக ஆடாத நிலையில், ராகுல் மட்டும் தனித்து நின்று 79 ரன்களை குவித்தார். ராகுல் களத்தில் நின்றவரை பஞ்சாப் அணி வெற்றி நம்பிக்கையில் இருந்தது. அந்தளவிற்கு சிறப்பாக ஆடினார் ராகுல்.

இரண்டு சீசன்களாக தன்னுடன் தொடக்க வீரராக களமிறங்கும் ராகுல் குறித்து பேசியுள்ள கெய்ல், விராட் கோலி செய்யும் பணியை ராகுலும் செய்கிறார். எனவே கோலிக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்பப்போவது ராகுல் தான். அதற்காக அதையே ஒரு அழுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ராகுல் எப்போதும்போல அவரது இயல்பான ஆட்டத்தையே ஆட வேண்டும்; யாருடனும் போட்டி போடவும் தேவையில்லை என்று கெய்ல் தெரிவித்துள்ளார்.