உலக கோப்பையில் ராயுடுவை ஓரங்கட்டியதில் உள்குத்தா..? தேர்வுக்குழு தலைவர் அதிரடி விளக்கம்
ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா ஆகியோர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக கடந்த ஆண்டு ராயுடுவை உறுதி செய்த இந்திய அணி நிர்வாகம், கடைசி நேரத்தில் உலக கோப்பை தொடரில் அவரை கழட்டிவிட்டது.
இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்னை இருந்துவருகிறது. குறிப்பாக நான்காம் வரிசையில் நீடித்துவந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இரண்டு ஆண்டுகாலம் தேடுதல் படலம் நடத்தப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா ஆகியோர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக கடந்த ஆண்டு ராயுடுவை உறுதி செய்த இந்திய அணி நிர்வாகம், கடைசி நேரத்தில் உலக கோப்பை தொடரில் அவரை கழட்டிவிட்டது.
விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். விஜய் சங்கர் 3டி பிளேயர் என்று கூறி அவரது தேர்வை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நியாயப்படுத்தினார்.
அதனால் ராயுடு கடும் அதிருப்தியடைந்தார். அதன்பின்னர் உலக கோப்பையின் இடையே தவான் காயத்தால் வெளியேறிய பிறகு ரிஷப் பண்ட் அணியில் இணைந்தார். விஜய் சங்கர் காயத்தால் வெளியேறியதை அடுத்து மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். உலக கோப்பை அணியில் மாற்று வீரர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த ராயுடு, இரண்டு முறை வீரர்கள் மாற்றப்பட்ட போதும் அணியில் எடுக்கப்படவில்லை. அதனால் விரக்தியடைந்த ராயுடு, அதிரடியாக ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், இன்று வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை அறிவித்தபோது, ராயுடு குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ராயுடுவை உலக கோப்பை அணியில் எடுக்காததில் எந்தவித உள்நோக்கமோ தனிப்பட்ட விவகாரமோ கிடையாது. சரியான காம்பினேஷனில் அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக அவரை எடுக்க முடியவில்லை. ராயுடு டி20யில்(ஐபிஎல்) நன்றாக ஆடியதன் அடிப்படையில் அவர் மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் அணியில் நாங்கள் தான் எடுத்தோம். அப்போது ராயுடுவை எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்தோம்.
அதன்பின்னர் அவர் ஃபிட்னெஸ் டெஸ்டில் ஃபெயில் ஆனபோது, அவருக்கு ஃபிட்னெஸ் ட்ரெய்னிங் கொடுத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்தோம். எனவே ராயுடுவுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ராயுடுவை எடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே ராயுடுவை உலக கோப்பை அணியில் எடுக்காததில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளவில்லை என்று பிரசாத் தெரிவித்தார்.