இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா எப்போது இந்திய அணியில் எடுக்கப்படுவார் என்று தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா கருத்து கூறியுள்ளார். 

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்து, 3 விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்தவர் ஹர்திக் பாண்டியா.

2018ம் ஆண்டு ஆசிய கோப்பையில் முதுகில் அடைந்த காயத்திற்கு பிறகே அவரது ஃபிட்னெஸ் சரியாக இல்லை. அதன்பின்னர் அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டுவருகிறார் ஹர்திக் பாண்டியா. 2019 உலக கோப்பையில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அந்த தொடரிலும் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் ஆடினாரே தவிர, பவுலிங் வீசவில்லை. பவுலிங் வீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் அவர் இல்லாததால் தான் பந்துவீசவில்லை. கடந்த ஐபிஎல் சீசனிலும் அவர் பந்துவீசவில்லை.

ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் தான் அவர் இந்திய அணியில் இருப்பது பிரயோஜனம். ஏனெனில் அவர் ஒரு ஆல்ரவுண்டராகத்தான் இந்திய அணிக்கு தேவை. டி20 உலக கோப்பைக்கு பிறகு, முழு ஃபிட்னெஸை அடைவதற்காக அவராகவே காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொண்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மறுவாழ்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.

நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடாத ஹர்திக் பாண்டியா, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் எடுக்கப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உருவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்யாதது மற்றும் அவர் எப்போது இந்திய அணியில் எடுக்கப்படுவார் என்பது குறித்து பேசிய தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா, ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கியமான வீரர். அவர் 100 சதவிகித ஃபிட்னெஸை அடைந்து, அவர் ஆட தயார் என்ற தகவல் வந்ததும் உடனடியாக அவரை அணியில் எடுப்போம். இப்போது அவரே அணி தேர்வுக்கு அவர் தயார் என அறிவிக்கவில்லை. எனவே அவர் ஃபிட்னெஸை அடைந்ததும் உடனடியாக அணியில் எடுக்கப்படுவார் என்று சேத்தன் ஷர்மா தெரிவித்தார்.