அதை ரெய்னாவே வைத்துக்கொள்ளட்டும்.. விட்டுக்கொடுத்த ஹர்பஜன் சிங்..! யாருக்கும் தெரியாத தகவலை வெளியிட்ட சிஎஸ்கே
ரெய்னாவுக்காக ஹர்பஜன் சிங் விட்டுக்கொடுத்த ஒரு நிகழ்வை, ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளன்று வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது சிஎஸ்கே அணி.
ரெய்னாவுக்காக ஹர்பஜன் சிங் விட்டுக்கொடுத்த ஒரு நிகழ்வை, ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளன்று வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளது சிஎஸ்கே அணி.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர். அனில் கும்ப்ளே என்ற மாபெரும் ஸ்பின்னர் அணியில் இருந்த காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து இந்திய அணிக்காக பல அருமையான ஸ்பெல்களை வீசியவர் ஹர்பஜன் சிங்.
இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்லில் 2008லிருந்து 2017 வரை 10 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங், 2018ம் ஆண்டு முதல் முறையாக சிஎஸ்கே அணிக்காக ஆடினார். 2018 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட ஹர்பஜன் சிங்கை, சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், இன்னும் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்.
இந்நிலையில், அவரது பிறந்த தினமான இன்று, அவர் ரெய்னாவுக்காக விட்டுக்கொடுத்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளது சிஎஸ்கே. ஹர்பஜன் சிங்கிற்கு இன்று 40வது பிறந்தநாள். இதையடுத்து அவருக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில், சிஎஸ்கே அணியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது.
இந்திய அணியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் தான் பயன்படுத்திய ஜெர்சி எண் 3-ஐ, சிஎஸ்கே அணியில் ரெய்னா ஏற்கனவே பயன்படுத்துகிறார் என்பதால், அவரே வைத்துக்கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டு ஜெர்சி நம்பர் 27ஐ எடுத்துக்கொண்டார் என்று ஹர்பஜன் சிங்கின் செயலை நினைவுகூர்ந்து சிஎஸ்கே வாழ்த்தியது.