#IPL2022 மெகா ஏலம்: எந்த 4 வீரர்களை ஆர்சிபி தக்கவைக்கணும்..? மேட்ச் வின்னரையே கழட்டிவிட்ட பிராட் ஹாக்
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்துக்கு முன் ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசனின் 29 லீக் போட்டிகள் நடந்துள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் 15வது சீசனில் கூடுதலாக புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
மெகா ஏலம் நடக்கவிருப்பதால், அனைத்து அணிகளும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற அனைத்து வீரர்களையும் கழட்டிவிட வேண்டும்.
அந்தவகையில், இதுவரை ஒரு சீசனில் கூட ஐபிஎல் டைட்டிலை வென்றிராத ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்ற கேள்விக்கு டுவிட்டரில் ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, விராட் கோலி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய நால்வரையும் ஆர்சிபி அணி தக்கவைக்கலாம் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான டிவில்லியர்ஸின் பெயரை ஹாக் தெரிவிக்கவில்லை. 37 வயதாகிவிட்ட டிவில்லியர்ஸ், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல்லில் ஆடுவார் என்பது தெரியவில்லை. அதனால், ஆர்சிபி அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை பிராட் ஹாக் தேர்வு செய்யவில்லை. அதுமட்டுமல்லாது, இப்போதைய சூழலில், வெளிநாட்டு வீரர்களை பெரிய தொகைக்கு எடுப்பது ரிஸ்க் என்றும் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.