டி20-யில் இரட்டை சதம் அடிக்கும் தகுதியும் திராணியும் அவருக்கு மட்டும்தான் இருக்கு! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி
டி20 கிரிக்கெட்டில் யாரால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருகாலத்தில் இரட்டை சதம் என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. சயீத் அன்வர் அடித்த 194 ரன்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
ஆனால் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்ட சச்சின் டெண்டுல்கர், முதல் இரட்டை சதத்தை விளாசி, அந்த சாதனையையும் படைக்க, அதன்பின்னர் பல வீரர்கள் இரட்டை சதம் அடித்தனர்.
சச்சினை தொடர்ந்து சேவாக், ரோஹித் சர்மா, மார்டின் கப்டில், கிறிஸ் கெய்ல், ஃபகார் ஜமான் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தனர். அதிலும் ரோஹித் சர்மா 3 முறை இரட்டை சதம் விளாசினார். 264 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். ரோஹித்தின் இந்த சாதனையை இனிமேல் மற்றொரு வீரர் முறியடிப்பது என்பது நடக்காத காரியம். 200 ரன்கள் வேண்டுமானால் அடிக்கலாம். ஆனால் 264 ரன்கள் என்பது இனியொரு வீரருக்கு சாத்தியமே இல்லாத ஸ்கோர்.
இவ்வாறு ஒருநாள் கிரிக்கெட்டில் சாத்தியப்படாமல் இருந்த இரட்டை சதம் என்பது காலப்போக்கில் அசால்ட்டானது. அதேபோல இப்போது டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாருமே இரட்டை சதம் அடிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் இரட்டை சதம் அடிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் யார் முதலில் இரட்டை சதமடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்கிடம் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த பிராட் ஹாக், இப்போதிருக்கும் வீரர்களில் ரோஹித் சர்மா மட்டுமே டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதமடிக்க தகுதியான வீரர். அவரால் மட்டுமே டி20 போட்டிகளில் இரட்டை சதமடிக்க முடியும். நல்ல ஸ்டிரைக் ரேட், அருமையான டைமிங், சிறப்பான ஷாட்டுகளை ஆடக்கூடியவர் ரோஹித் சர்மா. மேலும் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் சிக்ஸர்களை விளாசக்கூடியவர். எனவே அவரால் மட்டுமே இரட்டை சதமடிக்க முடியும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
Also Read - ஷேன் வாட்சன் செம பேட்டிங்.. அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற செய்த ஆட்டநாயகன்