ரிஷப் பண்ட்டுக்கு கடந்த 8ம் தேதியே உறுதியான கொரோனா! நெட் பவுலர் ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ்.. பிசிசிஐ தகவல்
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு கடந்த 8ம் தேதியே கொரோனா உறுதியாகிவிட்டதாகவும், அவர் கிட்டத்தட்ட குவாரண்டினை முடித்துவிட்டதாகவும், பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்திலேயே இருக்கிறது.
இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயோ பபுள் விதிகளை பின்பற்றி தங்கியிருக்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தீவிரமாக தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக இன்று தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 8ம் தேதியே ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா உறுதியானதாகவும், அதனால் கிட்டத்தட்ட ரிஷப் பண்ட்டின் குவாரண்டின் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் நெட் பவுலர் தயானந்த் கரனிக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் அவர் இந்திய அணியுடன் துர்ஹாமிற்கு செல்லாமல் குவாரண்டினில் இருக்கிறார்.