பிசிசிஐ கேட்ட உடனே ஒப்புக்கொண்டதற்கு தோனிக்கு நன்றி - சௌரவ் கங்குலி
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
ஸ்டாண்ட்பை வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2007ல் முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி. 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை வென்றவர் தோனி. எனவே அவரது அனுபவம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெகுவாக பயன்படும் என்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிசிசிஐயின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, அனைத்து டி20 உலக கோப்பைகளிலும் ஆடியுள்ள தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு வலுசேர்க்கும். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டதை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொண்ட தோனிக்கு நன்றி என கங்குலி தெரிவித்தார்.
தோனி டி20 உலக கோப்பையில் மட்டுமே இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.