ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜூலை 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த ஃபைனலில் ஆடும் இந்திய அணி, அதன்பின்னர் இங்கிலாந்திலேயே தங்கியிருந்து, ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

அதன்பின்னர் அக்டோபர் பிற்பாதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. இதற்கிடைப்பட்ட காலம் தான் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த ஒரே வாய்ப்பு. எனவே அதை பயன்படுத்திக்கொள்வதில் உறுதியாக உள்ளது பிசிசிஐ.

ஐபிஎல்லை டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடத்தி முடிக்கும் முனைப்பில், இங்கிலாந்து தொடரை விரைவில் முடிக்கும் வகையில், 2வது டெஸ்ட்டுக்கும் 3வது டெஸ்ட்டுக்கும் இடையேயான 9 நாட்கள் இடைவெளியை 4 நாட்களாக குறைக்கக்கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்தது பிசிசிஐ. ஆனால் இங்கிலாந்து அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பிளான் பி வைத்துள்ளது பிசிசிஐ.

அதன்படி, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரையிலான ஒரு மாத காலக்கட்டத்தில் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 24 நாட்களில் 27 லீக் போட்டிகளை நடத்த வேண்டும். அதில் மொத்தம் 4 சனி, 4 ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. அந்த 8 நாட்களில் மொத்தம் 16 போட்டிகள் நடத்தப்படும். எஞ்சிய 16 நாட்களில் 11 போட்டிகள். எனவே செப்டம்பர் 15 - அக்டோபர் 15 காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.