ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கேட்ச் கோட்டைவிட்டதால் முழு கவனமும் அவர் மீது திரும்பியது. அதனால் புவனேஷ்வர் குமார் வசைகளுக்கு உள்ளாகாமல் தப்பினார்.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அரைசதம்(60) மற்றும் ரோஹித் - ராகுல் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 71 ரன்களை குவித்தார். 4ம் வரிசையில் இறங்கிய முகமது நவாஸ், இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி அருமையான கேமியோ ரோல் பிளே செய்தார். 20 பந்தில் 42 ரன்களை விளாசிய நவாஸின் பேட்டிங் தான், பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.

இதையும் படிங்க - Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்

அதன்பின்னர் ஆசிஃப் அலியும், குஷ்தில் ஷாவும் சிறப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். கடைசி ஓவரில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் இலக்கை விரட்டி கொண்டிருந்தபோது 18வது ஓவரில் ரவி பிஷ்னோயின் பவுலிங்கில் தேர்டு மேன் திசையில் ஃபீல்டிங் செய்த அர்ஷ்தீப் சிங், ஆசிஃப் அலி கொடுத்த எளிய கேட்ச்சை தவறவிட்டார். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. அதைப் பயன்படுத்தி புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரை ஆசிஃப் அலி அடி வெளுத்துவிட்டார்.

கடைசி 2 ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட, புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் ஆசிஃப் அலியும் குஷ்தில் ஷாவும் இணைந்து 19 ரன்களை குவித்துவிட்டனர். அந்த ஓவரிலேயே கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்துவிட்டது.

அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை கோட்டைவிட்டதால், இன்று முழுக்க நெட்டிசன்களும், ரசிகர்களும், மீடியாவின் கவனம் அர்ஷ்தீப் சிங் மீது குவிந்ததால் அவர் ஹாட் டாபிக்கானார். அவர் மீது விமர்சனங்கள் எழுந்ததுடன், பரபரப்பாக பேசப்பட்டார். அதனால் புவனேஷ்வர் குமார் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கியது மழுங்கடிக்கப்பட்டது. 

இதையும் படிங்க - Asia Cup: மருத்துவமனையில் ரிஸ்வான்.. பாகிஸ்தானுக்கு பாதிப்பு

அர்ஷ்தீப் சிங்கால் புவனேஷ்வர் குமார் தப்பினார். இல்லையெனில் டெத் ஓவரை மோசமாக வீசியதற்காக புவனேஷ்வர் குமார் விமர்சிக்கப்பட்டிருப்பார். புவனேஷ்வர் குமார் பொதுவாகவே நல்ல டெத் பவுலர் கிடையாது. அவர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து வீசுவார். ஆனால் டெத் ஓவர் அவருக்கு சரிப்பட்டுவராது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் செய்த தவறால் முழு கவனமும் அவர் மீது திரும்பியது. இல்லையெனில் புவனேஷ்வர் குமார் சிக்கியிருப்பார்.