T20 World Cup ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் நியமனம்
டி20 உலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஆண்டி ஃப்ளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் 17ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் டி20 உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள அணிகளாக திகழ்கின்றன.
ரஷீத் கான், முகமது நபி ஆகிய ஆஃப்கான் வீரர்கள் உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகின்றனர். அதனால் ஆஃப்கானிஸ்தான் அணியும் வலுவான மற்ற சர்வதேச அணிகளுக்கு சவால் விடும் அணியாக உள்ளது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்..? கோலி, ரோஹித்துடன் தேர்வாளர்கள் ஆலோசனை
டி20 உலக கோப்பைக்கான சூப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் அணியும் இடம்பெற்றுள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்த ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் தேவை என்றவகையில் ஜிம்பாப்வேவின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான ஆண்டி ஃப்ளவர் ஆஃப்கான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டி ஃப்ளவர் ஏற்கனவே பயிற்சியாளராக இருந்து சர்வதேச அணிகளை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். 2009லிருந்து 2014 வரை இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வழிநடத்தியவர் ஆண்டி ஃப்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டி ஃப்ளவரின் பயிற்சியின் கீழ் தான், 2010ல் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.