IPL 2022: ஐபிஎல் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா..! எந்த அணி தெரியுமா..? செம பிளான்
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக இணையும் அகமதாபாத் அணி, அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கும் திட்டத்தில் உள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்கள் சிலர் அவர்கள் சார்ந்த அணிகளிலிருந்து வெளிவந்துள்ளனர். இந்த பெரிய வீரர்கள் அனைவருமே ஏலத்திற்கு முன்பாக புதிய அணிகளால் வாங்கப்பட வாய்ப்புள்ளது.
லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சம் 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். அந்தவகையில், அகமதாபாத் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வாங்கி அவரை கேப்டனாக நியமிக்கும் திட்டத்தில் உள்ளது.
2015ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லில் 92 போட்டிகளில் ஆடி 1476 ரன்களை குவித்ததுடன், 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு, ஆட்டத்தையே திருப்பக்கூடிய மேட்ச் வின்னராக திகழ்ந்துவந்தார் ஹர்திக் பாண்டியா. ஆனால் கடந்த 2 சீசன்களாக அவரது ஃபிட்னெஸ் சரியில்லாததால் அவரால் முழு பங்களிப்பை அளிக்க முடியவில்லை. கடந்த சீசன் முழுவதுமாக அவர் பவுலிங்கே போடவில்லை. அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதால் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியால் தக்கவைக்கமுடியவில்லை.
இந்நிலையில், மேட்ச் வின்னரான ஹர்திக் பாண்டியாவை வாங்கி, அவரையே கேப்டனாகவும் நியமிக்கும் திட்டத்தில் அகமதாபாத் அணி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.