சாதனைகளை தகர்த்தே பழகிய விராட் கோலியின் சாதனையையே தகர்த்தெறிந்த இளம் வீரர் அபிஷேக் ஷர்மா..!
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விராட் கோலியின் அதிவேக சத சாதனையை இளம் வீரர் அபிஷேக் ஷர்மா தகர்த்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி, வெங்கடேஷ் ஐயரின் அபார சதத்தால்(198) 50 ஓவரில் 402 ரன்களை குவித்தது.
403 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி 42 பந்தில் சதமடித்தார். ஆனால் 49 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் அடித்து ஆட்டமிழந்ததையடுத்து, அதன்பின்னர் யாருமே சரியாக ஆடாததால், 42.3 ஓவரில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால், மத்திய பிரதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 42 பந்தில் சதமடித்ததன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்ததில் 2 வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2010ம் ஆண்டு பரோடா அணிக்காக ஆடிய யூசுஃப் பதான் 40 பந்தில் அடித்த சதம்தான், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரரின் அதிவேக சதம்.
யூசுஃப் பதானுக்கு அடுத்த இடத்தில் அபிஷேக் ஷர்மா உள்ளார். 50 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் 3ம் இடத்திலும், 52 பந்தில் சதமடித்த விராட் கோலி 4ம் இடத்திலும் உள்ளனர். அபிஷேக் ஷர்மா ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடுவது குறிப்பிடத்தக்கது.