4 ஆண்டுக்கு ஒருமுறை உலக கோப்பையின்போது மட்டுமே அதைப்பற்றி பேசுவதால் என்ன பயன்? ஆகாஷ் சோப்ரா அதிரடி
உலக கோப்பையின் போது மட்டுமே கூடுதல் அணிகளை சேர்ப்பது குறித்து பேசுவதைப் பற்றிய தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் சர்வதேச கிரிக்கெட்டின் நிரந்தர அங்கமாக திகழும் அணிகள். உலக கோப்பையில் இந்த அணிகள் அனைத்தும் நிரந்தரமாக ஆடும்.
மொத்தமாக 10 அணிகள் ஆடும் உலக கோப்பை தொடர்களில் கூடுதல் அணிகளை சேர்ப்பது குறித்து ஒவ்வொரு உலக கோப்பையின் போது மட்டுமே பேசப்படுகிறதே தவிர, அந்த சிறிய அணிகளுக்கு உலக கோப்பை அல்லாத காலத்தில் பெரிய அணிகளுடன் ஆடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுவதேயில்லை.
இந்நிலையில், உலக கோப்பையில் கூடுதல் அணிகளை ஆடவைப்பது குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, கூடுதல் அணிகளை சேர்ப்பது குறித்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பேசுகிறோம். 2019 உலக கோப்பையின்போது கூடுதல் அணிகளை சேர்ப்பது குறித்து பேசப்பட்டது. அடுத்த உலக கோப்பை வரும்போதும் இதுகுறித்து பேசப்படும்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதைப்பற்றி பேசுவது வெறும் கடமைக்காக பேசுவதாகவே தெரிகிறது. இதில் எதார்த்த சிந்தனை எதுவும் இல்லாதது போலவே தோன்றுகிறது. 2015 மற்றும் 2019 உலக கோப்பைகளுக்கு இடையே பெரிய அணிகள் எத்தனை முறை சிறிய அணிகளுடன் மோதியிருக்கின்றன?
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சிறிய அணிகளை உலக கோப்பையில் கூடுதலாக சேர்ப்பதன் மூலம் எந்தவகையில் கிரிக்கெட் மேம்படும். அப்படி உண்மையாகவே சிறிய அணிகளை கொண்டுவர நினைத்தால், உலக கோப்பைகளுக்கு இடையேயும் அவர்களை முடிந்தவரை, பெரிய அணிகளுடன் போட்டிகளில் ஆடவைக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.