#ENGvsIND டெஸ்ட்: மிடில் ஆர்டரில் அவரா..? இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கும் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை விமர்சித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அதற்காக, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் முடித்துவிட்டு இங்கிலாந்தில் தங்கியிருக்கும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் தான் இந்த தொடருக்கான முதன்மை தொடக்க வீரராக இருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக தொடரை விட்டு விலகியதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறக்கப்படவுள்ளார். மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் அணியில் இருக்கும் நிலையில், அவரை மிடில் ஆர்டரில் இறக்க இந்திய அணி தீர்மானித்துள்ளது.
இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, மயன்க் அகர்வால், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய 2 தொடக்க வீரர்கள் அணியில் உள்ளனர். கேஎல் ராகுல் ஓபனிங் செய்யமாட்டார் என்று தெரிகிறது. அணி நிர்வாகம், ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
இந்த முடிவு எனக்கு வியப்பளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங்கில் இறங்கி 5 சதங்கள் அடித்த வீரரை திடீரென மிடில் ஆர்டரில் இறக்க வேண்டியதன் அவசியம் என்ன? எனக்கு இது புரியவேயில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.